Friday, 3 April 2020

உணவே மருந்து - உணவு எப்போது நஞ்சாகிறது?

உணவே மருந்து என்பதே நம் முன்னோர்களின் வாக்கு. உணவை அளவுக்கு மிஞ்சியும் சாப்பிட கூடாது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதிலும் கூட விதிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தனர் முன்னோர்கள்.


அதன்படி எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் நன்மை மற்றும் தீமை என்பதையும் அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் ஆரோக்கியத்தை பற்றி எல்லாம் கவலைப்படாமல், வாய்க்கு ருசியாக கிடைத்தால் போதும் என பல பதார்த்தங்களையும் ஒரே நேரத்தில் வயிறார சாப்பிட்டு வெளுத்து கட்டுகிறோம்.

பொதுவாக கீரை வகைகளை உண்பதற்கு ஏற்ற நேரம் மதியமே. பொழுது சாய்ந்த பிறகு அல்லது இரவு நேரத்தில் கீரைகளை சாப்பிட கூடாது. ஏனென்றால் கீரையில் இருக்கும் பச்சையம் மற்றும் நார் சத்துக்களை ஜீரணிக்க தேவையான நொதிகள் இரவில் நமக்கு குறைவாகவே சுரக்கும். இதனால் செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுகிறது.




சிலவகை உணவுகளை சேர்த்து சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு ஏற்படும். ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை கொண்ட இரு உணவுப் பொருட்களை ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது.

பாலுடன் மீன், கீரை வகைகள் மற்றும் புளிப்பு பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலுக்கு அது நஞ்சாகும். அதே போல கோழிக்கறியுடன் தயிரயும், பால்,தயிர் மற்றும் மோருடன் வாழைப்பழங்களையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சுத்தமான தேனுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிட கூடாது. தேன் சாப்பிட்டவுடன் நெய் மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச கோளாறுகள் உண்டாக கூடும். பாலாடையை (cheese) சூடான பானங்கள், முட்டை, பழங்கள், பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களுடன் பால் குடிப்பதை தவிர்த்தல் நலம். இது ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களை ஒன்றாக சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.




முருங்கை மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்ட பின்னர் பால் குடிக்க கூடாது. அப்படி செய்தால் சரும ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிட கூடாது. மீன், அல்லது தேனை திப்பிலியுடன் சேர்த்து சாப்பிட கூடாது.




கிழங்கு வகைகள் மற்றும் இறைச்சி உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல கோளாறுகள் ஏற்படும்.எள்ளை பசலைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இறைச்சி உணவுகளுடன் உளுத்தம் பருப்பு, பால், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகளை எடுத்து கொள்ள கூடாது.

'பாதுகாப்பான ஆன்லைன் பேங்க்கிங் வசதி!’ - இதோ பயனுள்ள 10 குறிப்புகள்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஆபத்துகள் அதிகம் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. ஆனால், முறையாகப் பயன்படுத்தினால் ஆன்லைன் பேங்க்கிங் வசதி ஆபத்தில்லாத ஒன்றே.

பாதுகாப்பாக ஆன்லைன் பேங்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த சில குறிப்புகள்:
1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்கள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் உள்நுழைவுகளில் சிரமம் பார்க்காமல், மிகவும் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள். எளிமை என்பதைவிட, பாதுகாப்பே முக்கியம். தொடர் எழுத்துகள் மற்றும் எண்கள், நம்முடைய மற்றும் நம்முடைய நெருங்கிய உறவினர்களுடைய பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்டவற்றை பாஸ்வேர்டாக வைக்கவே வேண்டாம். அதற்குப் பதில், நமது வாழ்வில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வைச் சுருக்கி, பாஸ்வேர்டாக வைத்தல் சிறந்தது.




உதாரணமாக "I went to Ooty on the 8th of May" என்பதைச் சுருக்கி "Iwtoot@8om"என வைக்கலாம். இவ்வாறு, ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் ஏதாவது ஒரு நிகழ்வைச் சுருக்கி வைத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. நினைவு வைத்துக்கொள்வதும் எளிது! அல்லது "How a Password Changed My Life" என்ற நூலின் ஆசிரியரான "மோமோ எஸ்ட்ரெல்லா" என்பவர் வைத்ததுபோல பாஸ்வேர்டு வைக்கலாம்.

மனைவி செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பாஸ்வேர்டை Forgive@h3r (அவளை மன்னிக்க வேண்டும்) என்று வைத்திருந்தாராம். தினமும் பலமுறை பாஸ்வேர்டைப் பயன்படுத்த, சிறிது நாளில் மனைவி மேல் இருந்த வெறுப்பு குறைந்துவிட்டதாம்! அவ்வாறே சிகரெட் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்காக Quit@smoking4ever என பாஸ்வேர்டு வைத்தபின், சிகரெட் குடிக்கும் வேட்கை குறைந்ததாம்! இவ்வாறு நம்முடைய வாழ்க்கையின் லட்சியங்களை அல்லது நம்முடைய உணர்வுகளைக்கூட பாஸ்வேர்டாக வைக்கலாம்.

2. உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். Auto lock வசதியை அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்கலாம்! ஆனால், உங்களுடைய மொபைல் போனை அவ்வாறு வைத்திருப்பது சிறந்ததல்ல.




3. பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வைஃபையைப் பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனை செய்யாதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால், வை-ஃபையை அணைத்தே வையுங்கள். ஓசி வை-ஃபை வேண்டவே வேண்டாம்.



4. புதிதாக போன் மற்றும் ஆப்களில் வருகிற பாதுகாப்பு அப்டேட்டுகளை உதாசீனம் செய்யாதீர்கள். டேட்டாவைப் பார்த்தால், பின்னர் வங்கிக்கு பேட்டா தேய அலைய நேரிடும்.

5. எந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்தினாலும் அதைப் பயன்படுத்திய பின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள். அரைகுறை எதிலும் ஆபத்தானதே.

6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து, ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

7. அங்கீகாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.




8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

10. உங்கள் பிறந்த தேதி, பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்றவற்றை யாரிடமும் பகிராமல் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்றரீதியில் வரும் தகவல்களை ஒரு புன்சிரிப்புடன் ஜென் மனநிலையில் கடந்துவிடுங்கள்.

எண்டமிக், எபிடெமிக் மற்றும் பாண்டமிக் என்றால் என்ன?

பொதுவாக வைரஸ் பரவுதலை எண்டமிக், எபிடெமிக் மற்றும் பாண்டமிக் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

இதில் எண்டமிக் என்பது காலவரையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவக் கூடிய வைரஸ் வகைகளாகும். அம்மை மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் இதில் அடங்கும்.




இரண்டாவதாக குறிப்பிடப்படும் எபிடெமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளாகும். இந்த வகை வைரஸ்கள் மழைக்காலத்தில் அதிகம் தோன்றும். அப்போதுதான் அதிகமானோருக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உபாதைகள் தோன்றும். குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இந்த கிருமிகள் அழிந்து விடும் அல்லது சென்று விடும். 




தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ள பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பரவும் தன்மை கொண்டவை. இந்த வகை வைரஸ்களால் மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது அடுத்தவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. தற்போது பீதியைக் கிளப்பி வரும் கொரோனா பாண்டமிக் வகை என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.


Translate