Monday, 26 April 2021

தி மார்ஷ்மெல்லோ டெஸ்ட்

 

பொதுவாக நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலிலும், அந்த செயலை உணர்ந்து, அதன் விளைவுகளைப் புரிந்து பிறகு அதைச் செய்வது ஒன்றுபிடித்தமான செயலை, விளைவுகளைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் திருப்தியாக செய்வது மற்றொன்று.

 

மார்ஷ்மெல்லோ... முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரைப்பாகு மற்றும் ஜெலாடின் சேர்ந்த நம்ம ஊர் பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு மிருதுவான இனிப்புப் பண்டம். மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு மார்ஷ்மெல்லோ என்றால் கொள்ளைப் பிரியம்.

 

அப்படி நமக்குப் பிரியமான உணவை உண்பதில் உள்ள பொறுமைக்கும் அறிவாற்றலுக்குமிடையே உள்ள தொடர்பை விளக்க, இந்த மார்ஷ்மெல்லோக்களைக் கொண்டு, அமெரிக்கக் குழந்தைகளிடையே ஒரு சோதனையைச் செய்துள்ளார் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மனவியல் நிபுணரான பேராசிரியர் வால்ட்டர் மிஷல்.

 

பேராசிரியர் மிஷல் தனது பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்தது நான்கிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட 32 குழந்தைகளைபதினாறு ஆண் குழந்தைகள், பதினாறு பெண் குழந்தைகள் என்று சரிசமமாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். ஒவ்வொரு குழந்தையையும், ஒரு தனி அறையில், ஒரு மேஜைக்கு முன் அமரச்செய்து, அவர்கள் முன்னே ஒரு மார்ஷ்மெல்லோவை கைக்கு எட்டும்படி வைத்துவிட்டார். "நான் திரும்பி வருவதற்குள் இதை நீ தொடாமல் இருந்தால் உனக்கு இதுவும், இதோடு சேர்த்து இன்னொன்றும் என இரண்டு மார்ஷ்மெல்லோவை பரிசாகத் தருவேன்!" என்றபடி அறையை விட்டு வெளியேறி இருக்கிறார்.

 

எதிர்பார்த்தது போல, சில குழந்தைகள் பேராசிரியர் கதவை மூடி வெளியேறியவுடன் உடனடியாகப் பாய்ந்து மார்ஷ்மெல்லோவை தின்றுவிட்டன. சில குழந்தைகள் கொஞ்சம் காத்திருந்து பிறகு ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் தின்கின்றன. ஆனால், சில குழந்தைகள் மட்டுமே ஆடிப்பாடி தமது கவனத்தை திசை திருப்பி கடைசிவரை மார்ஷ்மெல்லோவைத் தொடாமல் இரண்டாவது மார்ஷ்மெல்லோவை வென்றனவாம். இதில் ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் இருந்தன என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

 

"இப்போதே ஒரு பரிசுகாத்திருந்தால் இரண்டு பரிசுகள்" என்று 1972-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த எளிய பரிசோதனைக்குப் பிறகு, இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து, பிறகு வெளியிடப்பட்ட பரிசோதனை தொடர்ச்சியின் முடிவுகள், பெரும் ஆச்சரியத்தைத் தந்தன.

 

இரண்டாவது மார்ஷ்மெல்லோவை காத்திருந்து பெற்றுக் கொண்ட குழந்தைகள் வளர்ந்தபோது, அவர்களிடையே கற்கும் திறன் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் அவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதோடு, அவர்களிடையே உடற்பருமன், பற்சிதைவு போன்ற உபாதைகள் குறைவாகவும் இருந்திருக்கிறது. மேலும், மது, புகை போன்ற போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல் குறைவாகவும், அனைத்திற்கும் மேலாக வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருந்ததாகவும் மிஷலின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்க 'தி மார்ஷ்மெல்லோ டெஸ்ட்' உலகப் பிரசித்தி பெற்றது.

 

இவர்கள் இப்படி, செயல்பட்டதை, ‘காக்னிட்டிவ் கன்ட்ரோல்’ (Cognitive Control) என்று அழைக்கும் மனவியல் மருத்துவர்கள் அதை எளிமையாக விளக்குகின்றனர். பொதுவாக நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலிலும், அந்த செயலை உணர்ந்து, அதன் விளைவுகளைப் புரிந்து பிறகு அதைச் செய்வது ஒன்றுபிடித்தமான செயலை, விளைவுகளைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் திருப்தியாக செய்வது மற்றொன்று.

 

மார்ஷ்மெல்லோ பரிசோதனையில், இந்தக் குழந்தைகள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அலுத்துக் கொள்ளாமல் செய்வதைத் திருப்தியாய் செய்தன. அதனால் இவர்களுக்குக் கிடைத்த பரிசுகள் இரண்டு, பலன்கள் பல மடங்கு என்பது விளங்குகிறது என்கிறார்கள்.

 

ஆக, இது குழந்தைகளுக்கான டெஸ்ட் மட்டுமல்லஇதேபோல நமக்குப் பிடித்த ஒரு மார்ஷ்மெல்லோவைத் தேர்ந்தெடுத்து நமக்கும் ஒரு டெஸ்ட் வைத்துக்கொள்வோம். நமக்கும் இந்த Delay in Gratification… அதாவதுபொறுமையை காத்தல்என்ற குணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வோம்.

 

ஏனென்றால், உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், ஷாப்பிங்கின் போது உங்களது பணத்தை நீங்கள் சேமிக்கலாம்உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், சினிமா, கிரிக்கெட், சமூக வலைதளங்களில் தூக்கத்தை தியாகம் செய்வதைத் தவிர்க்கலாம். உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், விடியற்காலையில் எழுந்து, இன்னும் இரண்டு உடற்பயிற்சிகளை கூடச் செய்யலாம்... என இன்னும் பலவற்றையும் இந்த மார்ஷ்மெல்லோ டெஸ்ட் புரிய வைக்கிறது.

 

ஆம்ஆசைக்கும், பொறுமைக்கும் இடையேயுள்ள ஒரு சிறு இழையில் தான், திருப்தி எனும் மந்திரமும், அதனூடே அழகிய வாழ்க்கையும் உள்ளது!

 

Thursday, 1 April 2021

ரிசர்வ் வங்கியின் வரலாறும், அம்பேத்கர் ஆலோசனையும்!


இன்று முட்டாள்கள் தினம், அறிவிலிகள் தினம் என சமூக ஊடகங்களில் நண்பர்களைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றுதான் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


டாக்டர் அம்பேத்கர் `இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்' என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தப் புத்தகம் பொருளாதாரம் குறித்த அரிய பல ஆலோசனைகளை முன்வைத்தது. இது அப்போது ஆண்ட ஆங்கிலேயர்களை ஆச்சர்யப்படுத்தியது. இந்தப் புத்தகத்தின் சாரத்தை அதில் இடம்பெற்று இருந்த பரிந்துரைகளை, இந்திய கரன்சி மற்றும் நிதிக்கான ராயல் குழுவுக்கு 1925-ல் டாக்டர் அம்பேத்கர் சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அக்குழு ஆச்சர்யப்பட்டது. அவர் முன்வைத்த அத்தனை பரிந்துரைகளையும் முழுமையாக அந்தக் குழு ஏற்றுக்கொண்டது. இதை அடிப்படையாக வைத்து `ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934'-ஐ அது உருவாக்கியது.


ஏப்ரல் ஒன்றும் ரிசர்வ் வங்கியும்

இதையடுத்து 1935 ஏப்ரல் 1 அன்று ரிசர்வ் வங்கி தொடங்கப் பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1949-ம் ஆண்டு இந்த வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டது.  அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படிதான் இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப் பட்டிருக்கிறது.

முதலில், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கி, தற்போது மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, ரிசர்வ் வங்கி.  இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், மேலும் இரண்டு நாடுகளுக்கு மத்திய வங்கியாகச் செயல்பட்டிருக்கிறது.

சரி, அதைத் தெரிந்துகொள்வதற்கு முன், இந்திய ரிசர்வ் வங்கியை நிர்வகிப்பது யார் எனத் தெரிந்துகொள்வோம்.  ஒரு ஆளுநர், 4 துணை ஆளுந‌ர்கள், நிதி அமைச்சகப் பிரதிநிதிகள் இருவர், அரசால் நியமிக்கப்படும் இயக்குந‌ர்கள் 10 பேர் மற்றும் நான்கு மண்டலங்களின் மூலம் 4 பேர். ஆக மொத்தம் 21 இயக்குந‌ர்கள் கொண்ட மத்திய வாரியம்தான் ரிசர்வ் வங்கியை இயக்குகிறது. இயக்குந‌ர்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்.

இந்தியாவின் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஜி.டி.பி மற்றும் பணவீக்கத்தைக் கண்காணிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்வது, வாடிக்கையாளர் களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மேன் போன்ற சேவைகளை வழங்குவது எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துவருகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களைக் கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பைத் தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின் அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும், செல்லாது என்று தீர்மானிப்பது போன்ற நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளைச் செய்துவருகிறது.

புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது, இந்தியாவில் ஒட்டுமொத்த கடன் அளவு மற்றும் அதற்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, கே.ஒய்.சி விவரங்களைச் சரிபார்ப்பது மற்றும் நெறிப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகங்கள், அந்நியச் செலாவணிகள் போன்றவற்றையும் கவனிக்கிறது.

இரண்டு நாடுகள், ஒரு வங்கி 1937-ல் பர்மா, தனிநாடு ஆன போதிலும், 1947 ஏப்ரல் வரை, நம்முடைய ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கும் மத்திய வங்கியாக இருந்தது.  இடையில் 1942 முதல் 1945 வரை மூன்று ஆண்டுகள் மட்டும் பர்மா, ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்த சமயம் நீங்கலாக, 7 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கு மத்திய வங்கி.

1947 ஆகஸ்ட் 14-ல் உதயமான பாகிஸ்தானுக்கு 1948 ஜூன் மாதம் `பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி' உருவாகும் வரை, இந்திய ரிசர்வ் வங்கிதான் மத்திய வங்கியாக விளங்கியது.

Translate