நான்
முதன் முதலில் பள்ளி சென்ற நாள் இன்னும் என் மனதை விட்டு விலகுவதற்குள் என் மூத்த மகன்
தவனேஷ் பள்ளி சேரும் நாள் வந்தது. அரசியலுக்கு அடுத்து பள்ளி / கல்லூரிகள் மிகப்பெரிய வியாபாரம் ஆகி
பல வருடம் ஆன பிறகு என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினற்கு "நல்ல பள்ளியில்" கல்வி (நல்ல கல்வி என்பது கேள்விக்குறி) என்பது கொஞ்சம் எட்டாக்கனியாகவே இருந்து
வருகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ்
இருப்பவன் அரசு நடத்தும் பள்ளிகளில் தத்தம் பிள்ளைகளை சேர்த்து விடுவர்.
பணக்காரர்களுக்கு என்றே பிரத்யேகமாக உலாவும் பல ஹைடெக் பள்ளிகள் புற்றீசல் போல்
பெருகி விட்டதால் அவர்களுக்கும் கவலை இல்லை. இடையில் மாற்றிக்கொண்டு தவிப்பது
நடுத்தர வர்க்கத்தினரே. அரசாங்க பள்ளியில் சேர்க்க மனமும் வறட்டு கவுரமும் இடம்
தராது; ஹைடெக் பள்ளிகளில் சேர்க்க நமது பொருளாதாரம் இடம் தராது.
நம்மில் பலர் நம் சக்திக்கு
மீறி ஹைடெக் பள்ளியில் சேர்த்து பிறகு குழந்தையையையும் கஷ்டப்படுத்தி நாமும் கடன்
தொல்லைகளில் சிக்கி தவிக்க நேரிடும். நல்லவேளையாக
என் மனைவி ஹைடெக் பள்ளி மோகத்தில் திளைக்காதவளாக இருந்தமையால் அவள் படித்த
"இராமகிருஷ்ண வித்தியாலயாவிலேயே" என் மகன்களை சேர்க்க முடிவெடுத்தோம்.
"நல்ல பள்ளி"
என்கிற கோட்பாடுகளுக்கு இணங்கும் விதமாக இந்த பள்ளி அமைந்துவிட்டது என்பதைவிட
எங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்றவிதமாக இந்த பள்ளி அமையும் என்ற கணக்கும் என்
மனைவிக்கு பிற்காலத்தில் வேலை கிடைக்கும் என்கிற கணக்கும் என் இளைய மகன் ஆகாஷ்க்கும்
வேறு பள்ளி தேட வேண்டிய அவசியம் இருக்காது என்கிற கணக்கும் எங்களை அந்த பள்ளியை
தேர்ந்தெடுக்க காராணிகள் ஆயின. (தற்போது அந்த பள்ளியின் கிட்டத்தட்ட அனைத்து
நிர்வாக உறுப்பினர்களும் எங்கள் நெருங்கிய சொந்தம் என்பது வேறு விஷயம்).
அரசு சமச்சீர் கல்வி அமுல்படுத்த
பல காரணி இருந்திருக்கக்கூடும். ஆனால் என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் தத்தம்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இது ஒரு விதத்தில் வசதியாகவே அமைந்தது. அதுயாதெனில்
எந்த தனியார் பள்ளியிலும் (CBSE பள்ளி தவிர) சமச்சீர் பாட திட்டமே; வேறுபாடு யாதெனில் ஆசிரியர்
சொல்லித்தரும் விதம் மற்றும் பாடத்திட்டம் தவிர வேறு என்ன அங்கே
சொல்லித்தரப்படுகிறது என்பது ஆகும். அந்த வகையில் "இராமகிருஷ்ண வித்தியாலயா"
பள்ளி பாடத்திட்டம்தவிர மனிதனுக்கு தேவையான நல்ஒழுக்கத்தை போதித்து வருவது வரவேற்க்கதக்கது.
முதல் நாள் வகுப்பின் போது நெல்லில்
பேர் எழுதுவதெல்லாம் வழக்கொழிந்து விட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது "இராமகிருஷ்ண
வித்தியாலயா" பள்ளி இன்னும் அந்த வழக்கத்தை தொடர்வது பெற்றோர்களாகிய
எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அந்த விழாவிற்கு எங்கள் குடும்பத்துடன்
(என் அம்மா, என் மனைவி, இளைய மகன் ஆகாஷ்) சென்று எழுத்தறிவித்தல்
(அக்சராப்யாசம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியைவிடவும் மன நிறைவை
அளித்தது.