Sunday, 21 July 2019

மரியாதை!


வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவி பசிப் பிணி போக்கிய வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அச்சிடப்பட்டு ‘அருட்பா’ என வெளியிடப்பட்டது.  அப்போது யாழ்ப்பாணத்துப் பெரும்புலவர் ஆறுமுக நாவலரும், மற்றும் சிலரும் வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்தனர்.

நாயன்மார்களின் தேவாரம், திருவாசகம் ஆகியவையே ‘அருட்பா’ என சொல்லத் தகுந்தவை என்று வள்ளலார் எழுதிய பாடல்களை ‘மருட்பா’ என்றே அழைத்தல் தகும் எனக் கூறினார்.
வழக்கும் விசாரணைக்கு வந்தது.  நீதிமன்றத்தில் ஆஜராகும்படி வள்ளலாருக்குச் செய்தி அனுப்பப்பட்டது.  வள்ளலார் வழக்கில் ஆஜராக நீதி மன்றத்திற்க்குள் நிழைந்தார்.

அப்போது வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்த ஆறுமுக நாவலரும், மற்றவர்களும் எழுந்து நின்று அடிகளாருக்கு மரியாதை செலுத்தினர்.
நீதிபதி, ஆறுமுக நாவலரை நோக்கி, “எதிரியாகிய வள்ளலாரை எழுந்து நின்று வணங்கியது ஏன்?” என்று வினவினார்.

அதற்கு ஆறுமுக நாவலர், “அவருடைய பாடல்கள் தான் அருட்பா இல்லையே தவிர, அவர் உயர்ந்த சான்றோர், ஒழுக்கத்தின் திருவுருவம்.   எனவேதான் நான் அவருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் எழுந்து நின்றேன்” என மனமுருகிக் கூறினார்.

உடனே நீதிபதி, “நீரே அவரை சான்றோர் என்றும், ஓழுக்கத்தின் திருவுருவம் என்றும் கூறுகிறீர்.  எனவே அவர் எழுதிய பாடல்களும் ‘அருட்பா’ என்பது சரிதான்.  எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.” என்றார்.

Wednesday, 3 July 2019

கொடுப்பதற்கு தேவை மனமே!

நெடுந்தூரப் பயணத்துக்கிடையில் இளைப்பாற இடம் தேடி ஆலயம் ஒன்றில் அமர்ந்திருந்தனர் குருவும் சிஷ்யனும்.

அப்போது, பெரும் வணிகன் ஒருவன் அங்கு வந்தான். கட்டுக்கட்டாகப் பணத்தை அள்ளி உண்டியலில் போட்டான். கையோடு கொண்டுவந்திருந்த வியாபார ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தெய்வத்தின் காலடிகளில் வைத்து வணங்கினான். ஆலயத்தின் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தான்.

அதே நேரத்தில், இன்னொருவனும் கோயிலுக்குள் நுழைந்தான். அவன் தோற்றமே அவன் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது. தான் கொண்டுவந்திருந்த பொன்னையும் பொருளையும் வாரி எடுத்து உண்டியலில் போட்டான். மகிழ்ச்சி தவழும் முகத்தோடு தெய்வத்தின் முன்னால் நின்று பிரார்த்தித்தான். அவனும் பயபக்தியோடு பிரகாரத்தை வலம்வரத் தொடங்கினான்.

தட்டுத்தடுமாறியபடியே நடந்துவந்த ஒரு மூதாட்டி ஆலயத்துக்குள் நுழைந்தாள். தன் சுருக்குப் பையை எடுத்து, அதில் சேர்த்து வைத்திருந்த சில்லறைக் காசுகளை அள்ளினாள். உண்டியலில் போட்டாள். கருவறை இருக்கும் திசைக்குத் திரும்பி, தரையில் விழுந்து கும்பிட்டாள்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள் குருவும் சிஷ்யனும்.

‘‘அவர்கள் அனைவரது செயலும் ஏறக்குறைய ஒன்றுதான். இருந்தாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. என்னவென்று புரிகிறதா?’’ எனக் கேட்டார் குருநாதர்.

புரியாமல் விழித்தான் சிஷ்யன்.

‘‘சொல்கிறேன் கேள்..’’ என்று கூறி விட்டு, விளக்கமாகப் பேசலானார் குரு.. ‘‘கட்டுக்கட்டாக பணத்தைக் கொடுத்து, தன் புதிய வியாபாரம் லாபகரமாக நடைபெற வேண்டும் என பிரார்த்தித்தான் அந்த வணிகன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெற முயல்வது வியாபாரம் அல்லவா!’’

‘‘ஆமாம் குருவே..’’

‘‘இறைவன் தனக்கு அள்ளிக்கொடுத்ததில் ஒரு பங்கை கிள்ளியெடுத்து காணிக்கையாகத் திருப்பிச் செலுத்தினான் அந்த செல்வந்தன். ஒரு உபகாரத்துக்குச் செய்யும் பிரதியுபகாரம்தானே அது!’’.

‘‘ஆமாம் குருவே..’’.

‘‘அந்த மூதாட்டியின் பிரார்த்தனையில்தான் தெய்வீகம் இருக்கிறது. உண்டியலில் அவள் சேர்த்த நாணயங்கள் அவளுக்கு எப்படிக் கிடைத்தன என்று நீயே அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள். தெளிவு பிறக்கும்..’’ என்றார் குரு.

எழுந்து, குடுகுடுவென ஓடிச்சென்று அந்த மூதாட்டியை வழிமறித்தான் சிஷ்யன். அவளுக்கு பார்க்கும் திறன் இல்லை என்பதையும், அதனால்தான் தட்டுத்தடுமாறியபடியே நடக்கிறாள் என்பதையும் அறிந்தான்.

அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘‘உண்டியலில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?’’ என்று கேட்டான்.

பொக்கை வாய்ப் புன்னகையுடன் அவள் பேசினாள்..

‘‘எனக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. ஆனால், அந்தக் குறை தெரியாமல் நான் வாழ வழிகாட்டியிருக்கிறான் இறைவன். குறையொன்றுமில்லை என் வாழ்க்கையில். இந்தக் கோவிலின் வாசலில்தான் பூஜைப் பொருட்கள் விற்று என் ஜீவனத்தை கவனித்துக்கொள்கிறேன்..’’

மூதாட்டி பேசப் பேச, விரித்த விழிகளுடன் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘விளக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. விளக்குக்காகவும் எண்ணெய்க்காகவும் நான் செலவழித்திருக்க வேண்டிய பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே வருவேன். எல்லாம் அறிந்த இறைவன் இந்தக் கிழவி மீது காட்டும் கருணையாலும், அவன் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையாலும், அந்தப்பணம் அவனுக்குத்தானே போய்ச் சேர வேண்டும். அதனால், அதை அவ்வப்போது உண்டியலில் போட்டுவிடுவேன். இப்போதும் அதைத்தான் செய்தேன்..’’ என்றாள் அவள்.

அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினான் சிஷ்யன். எழுந்து, கருவறைப் பக்கம் திரும்பி வணங்கினான். இறைவன் புன்னகைப்பதுபோல் இருந்தது.

நல்லதும் கெட்டதும்!

அன்று சிஷ்யனுக்கு கொஞ்சம் கடுமையான பயிற்சி கொடுக்க முடிவு செய்தார் குருநாதர்.

‘‘இன்று உணவு தயாரிக்கும் பணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். சமையல் பணிகளில் மூழ்கிப்போனார்.

ஏதோ ஒரு அனுபவம் தனக்குக் கிடைக்கப்போகிறதென சிஷ்யன் அனுமானித்துக்கொண்டான். நூல்களைப் படிக்கும் வேலையில் ஈடுபட்டான்.

உணவு நேரம் வந்தது. சாப்பிட வருமாறு அவனை அழைத்தார் குரு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்தமர்ந்தான்.

நான்கு தட்டுகளை வைத்திருந்தார் குரு. நான்கிலும் உணவு பரிமாறப்பட்டிருந்தது. எதை எடுப்பது எனத் தெரியாமல் குழப்பமாக குருவை நோக்கினான் சிஷ்யன்.

‘‘எதை வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம்..’’ என்றார் குரு.

ஒவ்வொரு தட்டையும் கவனமாகப் பார்த்தான் சிஷ்யன். ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் எனக் கவனித்தான்.

முதல் தட்டு, அவன் வழக்கமாக உணவு சாப்பிடும் சாதாரண அலுமினியத் தட்டுதான். அதில் அவன் வழக்கமாகச் சாப்பிடும் உணவு இருந்தது.

இரண்டாவவதாக இருந்ததும் அலுமினியத் தட்டுதான். ஆனால், அதில் தடபுடல் விருந்துக்குரிய உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மூன்றாவதாக இருந்தது ஒரு வெள்ளித் தட்டு. அதில் வழக்கமான உணவு மட்டுமே இருந்தது.

நான்காவதாக இருந்தது தகதகக்கும் தங்கத்தட்டு. அதில், தடபுடல் உணவு வகைகள் பறிமாறப்பட்டிருந்தன.

சரிதான், இன்று நமக்கான பாடம் இந்தத் தட்டுகளில்தான் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான் சிஷ்யன். ஓரிரு விநாடிகள் யோசித்தான்.

முடிவுக்கு வந்தவனாக, முதல் தட்டை எடுத்து உணவை உண்ண ஆரம்பித்தான். அவன் அந்தத் தட்டைக் கையில் எடுக்கும்வரை கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த குரு, நிம்மதிப் பெருமூச்சுடன் நகர்ந்து சென்றார். அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தார். முடித்ததும், அவனுடன் உரையாடத் தொடங்கினார்.

‘‘நல்ல வேளை.. நீ தப்பித்தாய்! எச்சரிக்கை கொடுக்கும் வேலையை எனக்குக் கொடுக்கவில்லை..’’ என்றார் குரு.

‘‘என்னது.. தப்பித்தேனா?! என்ன சொல்கிறீர்கள் குருநாதா?’’ என்றான் சிஷ்யன்.

‘‘நான்கு தட்டுகளில் இரண்டில் விஷம் கலக்கப்பட்டிருந்தது..’’

சட்டென சிலையானான் சிஷ்யன்.

‘‘பதட்டம் வேண்டாம். நீ எடுத்துக்கொண்ட உணவில் விஷமேதும் கலக்கப்படவில்லை..’’

‘‘இதென்ன குருநாதா.. மிகவும் கடுமையான சோதனையாக இருக்கிறதே..’’ என்று கேட்டான் சிஷ்யன்.

அவனுக்கு விளக்கம் கூறத் தொடங்கினார் குரு..

‘‘முதல் தட்டில் இருந்தது நீ வழக்கமாகச் சாப்பிடும் உணவு. வழக்கமான அலுமினியத் தட்டுதான் அது. இரண்டாவதாக இருந்த அலுமினியத் தட்டில் விருந்துக்குரிய வகையில் சிறப்பான உணவு வகைகள் வைத்திருந்தேன். இந்த இரண்டு தட்டுகளிலும் விஷமேதும் கலக்கப்படவில்லை..’’.

இரண்டாவது தட்டை எடுத்திருக்கலாமோ என நினைத்துக்கொண்டான் சிஷ்யன்.

‘‘மூன்றாவதாக இருந்த வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்த வழக்கமான உணவில் விஷமும் இருந்தது. அதையடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தட்டிலும் விஷம் கலந்த விருந்துதான் காத்திருந்தது..’’.

தங்கத்தையும் வெள்ளியையும் கண்டு பரவசப்படாத தனக்கு, தானே ஒரு சபாஷ் சொல்லிக்கொண்டான் சிஷ்யன்.

‘‘இப்படித்தான்.. நல்லதும் கெட்டதும் நம் முன் எப்போதும் அணிவகுத்து நிற்கும். எதைத் தேர்ந்தெடுப்பதென்பது நமக்கான சவால்தான்..’’ என்று குரு சொல்ல, மீதமிருக்கும் மூன்று தட்டுகளையும் உற்றுப் பார்த்தபடியே இருந்தான் சிஷ்யன்.

‘‘தேவைக்கு அதிகமாக விரும்பும் ஆசை உனக்கு இருந்திருந்தால் வெள்ளித்தட்டை எடுத்திருப்பாய். அதுவே பேராசையாக இருந்திருந்தால் தங்கத்தட்டைத்தான் எடுத்திருப்பாய்..’’ என்றார் குரு.

‘‘நான் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேனா குருவே?’’

ஆர்வத்துடன் கேட்ட சிஷ்யனுக்கு, பதில் சொன்னார் குரு.. ‘‘அப்படியும் சொல்லமுடியாது. தப்பிவிட்டாய் என்றுதான் சொல்லமுடியும். வழக்கம்போலவே எல்லாம் தொடரட்டும் என்றிருந்தால், வாழ்க்கை காட்டும் புதிய அனுபவங்களின் சுவையை அறியாமலேயே போய்விடும்..’’.

‘‘நான் இரண்டாவதாக இருந்த தட்டை எடுத்திருக்கலாம் என்றுதானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?’’ என்றான் சிஷ்யன்.

‘‘ஆம். புதிய முயற்சியில் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் தாகம் உனக்கிருந்திருந்தால், நீ அதைத்தான் செய்திருப்பாய். அதில் இருந்த அருமையான உணவை அனுபவிக்கும் வாய்ப்பினை நீ இழந்துவிட்டாய். பேராசையோ, தேவைக்கு அதிகமாகச் சேர்க்கத் துடிக்கும் ஆசையோ தேவையில்லைதான். அதற்காக, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து அறிய சோம்பேறித்தனம் கொண்டு, மொத்தமாக எல்லாவற்றையும் புறம் தள்ளுவது புத்திசாலித்தனமில்லை. உன் புலன்கள் அனைத்தையும் நீ பயன்படுத்தவே இல்லை. பயன்படுத்தி இருந்தால், இரண்டாவது தட்டிலும் விஷம் இல்லை என்பதை உன் நாசி உனக்கு உணர்த்தியிருக்கும்’’ என்றார் குரு.

‘‘புரிந்தது குருவே’’ என்றவனிடம், இரண்டாவதாக வைக்கப்பட்டிருந்த உணவை எடுத்து, பத்திரமாக மூடிவைக்கச் சொன்னார்.

‘‘அதுதான் உனக்கான இரவு உணவு. அதுவரை கெடாது. அப்படித்தான் சமைத்திருக்கிறேன்’’ என்றார்.

‘‘நீங்கள் சாப்பிடவில்லையே குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

‘‘பாடம் நடத்துவதற்காகத்தான் என்றாலும், இரண்டு தட்டு உணவினை விஷம் கலந்து வீணடித்துவிட்டேன். அதற்கான தண்டனையாக இரண்டு வேளை உணவு எனக்கில்லை..’’ எனப் புன்னகை மாறாத முகத்துடன் கூறினார் குரு.

Tuesday, 2 July 2019

அனைத்தும் ஒன்றே!



ஊருக்குள் இருக்கும் தேவாலயத்தில் இருந்து பாதிரியார் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்திருந்தார். சிஷ்யன்தான் அவரை வாசலில் நின்று வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றான்.

தேவாலயத்தில் நடைபெற இருக்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி குருநாதரிடம் வேண்டுகோள் வைத்தார் பாதிரியார். அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வணங்கி விடைபெற்றார்.

அவர் சென்றதும், ‘‘நீங்கள் அந்த விழாவில் கலந்துகொள்வீர்களா குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

இன்முகத்துடன் அவனைப் பார்த்தார் குரு. ‘‘ஆமாம்’’ என்றார்.

‘‘அது வேறு மதத்தினரின் ஆலயம். அவர்கள் வழிபடுவது வேறு ஒரு கடவுள். நாம் அங்கே போவது சரியாகுமா?’’ என்றான் சிஷ்யன்.

கடவுள் குறித்தான ஐயப்பாடுகளில் இருந்து முழுதும் வெளிவரவில்லை சிஷ்யன் என்பதை குருநாதர் புரிந்துகொண்டார். கனிவுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘குயவன் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தோமே.. நினைவிருக்கிறதா?’’ என்றார் குரு.

‘‘ஆமாம் குருவே. நன்றாக நினைவிருக்கிறது’’ என தலையாட்டினான் சிஷ்யன்.

‘‘மறுபடியும் அந்த இடத்தை மனக்கண்களில் பார்த்துக்கொள். அவன் பிசைந்துவைத்திருந்த மண் ஒன்றுதான். ஆனால், அவன் உருவாக்கி அடுக்கிவைத்திருந்த பாத்திரங்கள் ஒன்றுபோலவே இல்லை. பானை, தட்டு, மூடி, ஜாடி.. என பெயரிலும் உருவத்திலும் வெவ்வேறாகவே அந்தப் பாத்திரங்கள் இருந்தன. இருந்தாலும், அவை எல்லாவற்றுக்கும் அடிப்படை மண் என்ற ஒரே பொருள்தானே!’’ என்றார் குரு.

அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார்..

‘‘தங்கத்தைத் தரையில் இருந்து வெட்டி எடுக்கிறோம். அதில் இருந்து பலவிதமான ஆபரணங்களைச் செய்கிறோம். வளையல், தோடு, கொலுசு, நெற்றிச்சுட்டி.. என வெவ்வேறு வடிவத்தில் உருவாக்குகிறோம். ஆனால், எல்லா ஆபகரணங்களுக்கும் மூலப்பொருள் தங்கம்தானே!’’

‘‘உண்மை குருவே..’’

‘‘சூரியனின் கதிர்வீச்சை எடுத்துக்கொள்வோம். நிறப்பிரிகையால் பல வண்ணங்களாகத் தெரியும் சூரியனின் ஒளியில் அடிப்படையாக இருப்பது வெண்மை மட்டும்தானே..’’.

‘‘உண்மைதான் குருவே..’’

‘‘பால் தயிராகிறது.. தயிர் வெண்ணெய் ஆகிறது.. வெண்ணெய் நெய் ஆகிறது.. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பால்தானே! நீர் கொட்டும்போது மழையாகிறது.. விழும்போது அருவியாகிறது.. ஓடும்போது நதியாகிறது.. பின்னர் சங்கமித்தவுடன் கடலாகிறது.. ஆனால், அடிப்படையில் அது நீர் மட்டும்தானே!’’

‘‘ஆமாம் குருவே.. எல்லோருக்கும் பொதுவான பரம்பொருள் ஒன்றுதான். அது வடிவங்களாலும் பெயர்களாலும் மாறுபட்டிருந்தாலும் மூலாதாரம் ஒன்றுதான் என்ற உண்மை எனக்குப் புரிந்துவிட்டது..’’ என்றான் சிஷ்யன்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே!

நாலு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரம்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது’’ என்றார் அவர். பக்கத்து ஊரில் இருந்து குருநாதரைப் பார்க்க அடிக்கடி ஆசிரமத்துக்கு வந்துபோகும் வெற்றிகரமான வணிகர் அவர்.

அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்தான் சிஷ்யன்.

தான் பட்ட கஷ்டங்களையும் பார்த்த சந்தோஷங்களையும் குருவிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் அவர்.

வெளியேறும் வரை அவரையே பார்த்துக்கொண்டே இருந்த சிஷ்யன், குருவிடம் விலகாத ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘‘என்ன மந்திரம் அது குருவே? ஒரே மந்திரத்தால் தொடர்ந்து ஒரு மனிதன் மகிழ்ச்சிகரமாக இருக்க முடியுமா என்ன?’’ என்றான்.

வாய்விட்டுச் சிரித்தார் குரு. சிஷ்யனை அருகே அழைத்து உட்கார வைத்துக்கொண்டார்.

‘&அவர் தான் அடைந்த சந்தோஷங்களை மட்டுமல்ல, சந்தித்த துயரங்களையும்தான் சொன்னார்.. கவனித்தாயா?’’ என்று கேட்டார் குரு.

‘‘ஆமாம் குருவே.. ஆனாலும் அவர் மகிழ்ச்சிகரமான மனிதராகவே இருக்கிறார். அதுதான் என் ஆச்சரியத்துக்கான காரணம்..’’ என்றான் சிஷ்யன்.

மறுபடியும் மனம்விட்டுச் சிரித்தார் குருநாதர்.

‘‘மாயமுமில்லை.. ஒரு மந்திரமும் இல்லை! வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள். இரண்டுமே நிரந்தரமானதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இதைத்தான் அவருக்கு என் ஆலோசனையாகச் சொன்னேன். அதை அவர் முற்றிலும் நம்பினார். முழுதாகக் கடைப்பிடித்தார். தோல்வியைக் கண்டு துவளுவதும் இல்லை. வெற்றியைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதுமில்லை. அதனால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்’’ என்றார் குரு.

‘‘புரிகிறது குருவே..’’ என்ற சிஷ்யனுக்கு புதிதாக ஒரு சந்தேகம்!

‘‘அதெப்படி குருவே.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் எப்படி நஞ்சாகும்?!’’ என்றான்.

அவன் கேள்வியையும் அவனையும் ரசித்தார் குரு.

‘‘நேற்று நம்மைச் சந்திக்கவந்த விவசாயி கொடுத்துச்சென்ற பழங்களில் பனம்பழம் ஒன்று இருப்பதைக் கவனித்தேன். இறைவன் உருவத்துக்கு முன்பாக அது வைக்கப்பட்டிருக்கும். பனம்பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வா’’ என்றார். எடுத்துக்கொண்டு வந்தான் சிஷ்யன்.

‘‘பனம் பழம் என்ன சுவை என்று உனக்குத் தெரியுமா?’’ என்று அவனிடம் கேட்டார் குரு.

‘‘மிக மிக இனிப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் குருவே.. ஆனால் இதுவரை சாப்பிட்டதில்லை..’’ என்றான் சிஷ்யன்.

‘‘இப்போது சாப்பிட்டுப் பார்..’’ என்றார் குரு. தன் கையில் இருந்த பனம்பழத்தை ருசிப்பதற்கு ஆவலானானான் சிஷ்யன். அவன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தார் குரு.

தோலைப் பிதுக்கி, நார்நாராக இருந்த பனம்பழத்தைக் கடிக்க வாயெடுத்தான் சிஷ்யன்.

பழத்தில் அவன் பல் பட்டதும் நாக்கில் தேள் கொட்டப்பட்டவனாக கையை விலக்கினான். முகத்தைச் சுளுக்கினான். புன்னகைத்தார் குரு.

‘‘என்ன ஆனது?’’ என்றார்.

‘‘இவ்வளவு கசப்பை நான் சுவைத்ததே இல்லை..’’ எனக் கத்தினான் சிஷ்யன்.

‘‘இனிப்பின் உச்சம் கசப்புத்தான் என்பதற்கு இறைவன் நமக்கு இயற்கையில் காட்டியிருக்கும் அடையாளம் இந்தப் பழம். அவ்வளவு அதிகபட்சமான இனிப்பு கொண்டது இது. அதனால்தான் கசப்பாகத் தெரிகிறது. இதே பழத்தை நெருப்பில் சுட்டோ, நீரில் வேகவைத்தோ இனிப்பைக் குறைத்தே உண்பார்கள். அப்போது கசப்பு தெரியாது..’’ என்றார் குரு.

‘‘ஆமாம் குருவே.. இப்போது ஒப்புக்கொள்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே!’’ என்றான் சிஷ்யன்.

Translate