Saturday, 26 January 2019

'254 பேனா நிப்’புகளால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகம்



இன்று (26.01.2019) நாடு முழுவதும் 70வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். குடியரசு தினத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், நமக்காக நாமே உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இதே நாளில்தான்.  1950ஆம் ஆண்டு ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது.  இந்த அரசியலமைப்பு சட்டம் குறித்து சிறு வயது முதல் நாம் பள்ளி கல்லூரிகளில் படித்திருப்போம்.



இதுதான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில்  மிக நீண்ட அரசியலமைப்பாகும்.  இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன என்பவை அவற்றுள் அடிப்படையானவை.  அதேபோல், இந்திய அரசியலமைப்பை  உருவாக்கும் பணி 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26இல் அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்பு வரைவுக்குழு உருவாக்கியதில் தொடங்கியது.  இக்குழு அளித்த அறிக்கை, 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றதுடன் பணிகள் முழுமை பெற்றது.



அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார் யார்?

அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொத்தம் 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.   இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் சட்டம் ரீதியான பின்புலம் கொண்டவர்கள்.  மும்பை நீதிமன்றத்தில் சட்டம் பயில்வதற்காக இடம் கிடைக்காமல் சிரமம்பட்டு, பின்னர் சிலரின் உதவியால் படிப்பை முடித்தவர் அம்பேத்கர்.  அவர்தான் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்.

1.  டாக்டர் அம்பேத்கர்
2.  அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
3.  கே.எம்.முன்ஷி
4.  கோவிந்த் பல்லாப் பண்ட்
5.  தேபி பிரசாத் கேத்தான்
6.  சர் சையது முகமது சாதுகல்லா
7.  கோபால சுவாமி அய்யங்கார்
8.  பிஎல் மிட்டர்



இனி, அரசியலமைப்பு சட்ட புத்தகம் குறித்த சுவாரசியமான சில தகவல்களை பார்க்கலாம்.

நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தை பிரேம் பெகாரி ரெய்ஜாடா என்பவர் எழுதினார்.  இதற்கு அவர் சுமார் 6 மாதங்கள் எடுத்துக்கொண்டார்.  இதனை எழுத 254 வகையான விதவிதமான பேனா நிப்புகளை அவர் பயன்படுத்தினார்.



அரசியலமைப்பின் எழுத்துப்பூர்வமான பிரதி இந்திய ஆய்வுக் கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அங்கு, அது பல்வேறு பிரதிகள் நகல் எடுக்கப்பட்டது.  இன்றும் சில கையெழுத்து பிரதிகள் சந்தையில் கிடைக்கின்றன.



நம்முடைய அரசியலமைப்புச் சட்ட புத்தகம் மிகவும் அழகான ஆவணம்.  அதோடு, மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒன்று.  அதில், மொஹஞ்சதாரோ முதல் வேத காலம் வரையிலான வரலாற்றை பிரதிபலிக்கும் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.  மெளரியா மற்றும் குப்தர் கால சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.



முன் பக்கங்கள் ஒன்றில் நடராஜனின் சிற்ப வடிவ ஓவியமும் இடம்பெற்றிருக்கிறது.  அதேபோல், காந்தி தண்டி யாத்திரை சென்றதை குறிக்கும் படமும் இருக்கிறது.



முஸ்லிம் காலம் முதல் பிரிட்டீஷ் காலம் வரையில் திப்பு சுல்தான், ராணி லஷ்மி பாய் மற்றும் அக்பர் படங்களும் இடம்பெற்றுள்ளன.



இறுதியாக, சுதந்திரத்திற்காக படை அமைத்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம் இடம்பெற்றுள்ளனர்.



அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின் முகப்பில் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கிறது.


Saturday, 12 January 2019

வேட்டி - சட்டை!

மதுரையில், டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டிச்சட்டை தான்!

இந்திய சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.

அந்த பள்ளியின் மாணவர்கள், சாலையில் அணி அணியாக நடந்து வந்தால்,  ஏதோ அரசியல் ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியஸ்டர் வேட்டியோ கிடையாது.

கதர் வேட்டிதான்.

வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

பள்ளிகளில் ஆசிரியைகளை 'அக்கா' என்றும் ஆசிரியர்களை 'ஐயா' என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ மாணவிகள்.

மாணவர்கள் வேட்டி அணிவதை போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.

திங்கக்கிழமை தோறும் நடைபெறும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேசபக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.

புதன்தோறும் நடைபெறும் சர்வசமயப் பிரார்த்தனைக்   கூட்டத்தில் பைபிள், பகவத்கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.

Sunday, 6 January 2019

நடையழகு


     சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் சிவாஜியின் நெருங்கிய நண்பர் மற்றும் ரசிகர்.  அவர் சிவாஜியை ஒரு முறை புட்டபர்த்திக்கு அழைத்துச் சென்றார்.

     புட்டபர்த்தி சென்றபோது பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம் அவர்களை உட்காரவைத்த பின் அழைத்து சென்றனர்.  நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது.  பிரத்யேக வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டவில்லை.

     புட்டபர்த்தி சாய்பாபாவிடம் இருவரும் சென்றபோது பாபா தெலுங்கில் “மெயின் நுழைவு வாயிலிலிருந்து நடக்க வைத்து விட்டேனே என்று என்று கோபம்தானே உனக்கு.  சிவாஜியின் நடிப்பில் ரொம்ப ரசிக்கத்தக்கது அவருடைய நடைதான் என்று எல்லாரும் சொன்னார்கள்.  எனக்கு உன் நடையை பார்க்கணும்னு ஆசை.  அதனால்தான் உன்னை இவ்வுளவு தூரம் நடக்க வைத்தேன்” என்றார்.

     சிவாஜிக்கு தெலுங்கு நன்றாகப்புரியும் .  பாபா சொன்னதைக்கேட்டு நெகிழ்ந்து விட்டார்.

Wednesday, 2 January 2019

பொய்!


     தேவர்கள் உண்ணும் அமிர்தத்தை உண்டால் சாக வேண்டியதில்லை என்று கேள்வியுற்றான் மேகநாதன்.  அதற்காக நீண்ட தவம் செய்தான்.  தவம் பலித்தது!  கடவுளும் தோன்றினார்.

     “உனக்கு என்ன வரம் வேண்டும்”.. என்றார் கடவுள்.

     “அமிர்தம் வேண்டும்..”

     “சரி தருகிறேன்.. ஆனால் அதை தரையில் வைத்தால் பலன் கிடைக்காது..” என்று கூறி வெள்ளி குடம் நிறைய அமிர்தம் கொடுத்துவிட்டு மறைந்தார் கடவுள்.

     அமிர்தத்தை எவருக்கும் கொடுக்க நினைக்காமல் தான் மட்டுமே அருந்த நினைத்தான் மேகநாதன்.  அமிர்த கலசத்தை தலையில் சுமந்தபடி நடந்தான்.  குறுக்கே சிறிய ஆறு வந்தது.  அப்போது மேகநாதனுக்கு வயிறு சிறிது தொல்லை செய்தது.  சற்று மறைவாக ஒதுங்க நினைத்தான்.  கடவுள் கூறியபடி குடத்தை கீழே வைக்க முடியாது.

     அப்போது ஆற்றின் பக்கம் ஒருவன் வந்துகொண்டிருந்தான்.  மேகநாதன், அவனிடம், அமிர்த குடத்தை கொடுத்து, சிறிது நேரம் தலையில் வைத்திருக்கும்படி வேண்டினான்.  ஆனால், குடத்தில் உள்ள அமிர்தம் பற்றி சொல்லவில்லை. 

     “சரி வைத்திருக்கிறேன்..”என்றான் புதியவன்.

     அதை திறந்து குடித்து விடுவானோ என்ற சந்தேகத்தில், “அப்பனே.. குடத்தில் உள்ளது கொடிய விஷம்.  மருந்துக்காக எடுத்துப்போகிறேன்; தரையில் வைத்தால், சக்தி போய்விடும்!  எனவே தலையிலேயே வைத்திரு..” எனக் கூறி, புதர்களுக்கிடையே ஒதுங்கினான்.
    
                தலையில் கலசத்தை சுமந்து நின்றவன் வெகுநாட்களாக வயிற்று நோயினால் அவதிப்படுபவன்.  ஆற்றில் விழுந்து, இறந்து விடலாம் என நினைத்து அங்கு வந்திருக்கிறான்.  கையில் விஷம் கிடைத்திருக்கிறது.  இதையே குடித்து இறந்து விடலாம் என நினைத்து குடத்திலிருந்த அமிர்தத்தை, விஷம் என நினைத்து ஒரு சொட்டு விடாமல், மட மட என குடித்து முடித்தான்.  அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.  குடித்து முடித்தவுடன் வயிற்று வலி முற்றிலும் நீங்கியது!  உடலெங்கும் புத்துணர்ச்சி பரவியது!!

     திரும்பி வந்த மேகநாதன் வெள்ளி குடம் கீழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டான்.

     “ஐயா.. நான் தீராத வயிற்று வலிக்காரன்!  தாங்கள் கொடுத்த விஷம் அடியேன் வயிற்று வலியை நீக்கியது!  நான், இறக்க நினைத்து ஆற்றில் விழ வந்தேன்.  விஷம் கிடைத்ததால் அதை குடித்து செத்து போக நினைத்தேன்; ஆனால் நீங்கள் கொடுத்த விஷம் என் நோயிலிருந்து என்னை காப்பாற்றி விட்டது.. நன்றி!” என்றான்.

Translate