இன்று (26.01.2019) நாடு முழுவதும் 70வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். குடியரசு தினத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், நமக்காக நாமே உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இதே நாளில்தான். 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியலமைப்பு சட்டம் குறித்து சிறு வயது முதல் நாம் பள்ளி கல்லூரிகளில் படித்திருப்போம்.
இதுதான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன என்பவை அவற்றுள் அடிப்படையானவை. அதேபோல், இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26இல் அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்பு வரைவுக்குழு உருவாக்கியதில் தொடங்கியது. இக்குழு அளித்த அறிக்கை, 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றதுடன் பணிகள் முழுமை பெற்றது.
அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார் யார்?
அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொத்தம் 8 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் சட்டம் ரீதியான பின்புலம் கொண்டவர்கள். மும்பை நீதிமன்றத்தில் சட்டம் பயில்வதற்காக இடம் கிடைக்காமல் சிரமம்பட்டு, பின்னர் சிலரின் உதவியால் படிப்பை முடித்தவர் அம்பேத்கர். அவர்தான் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்.
1. டாக்டர் அம்பேத்கர்
2. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
3. கே.எம்.முன்ஷி
4. கோவிந்த் பல்லாப் பண்ட்
5. தேபி பிரசாத் கேத்தான்
6. சர் சையது முகமது சாதுகல்லா
7. கோபால சுவாமி அய்யங்கார்
8. பிஎல் மிட்டர்
இனி, அரசியலமைப்பு சட்ட புத்தகம் குறித்த சுவாரசியமான சில தகவல்களை பார்க்கலாம்.
நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தை பிரேம் பெகாரி ரெய்ஜாடா என்பவர் எழுதினார். இதற்கு அவர் சுமார் 6 மாதங்கள் எடுத்துக்கொண்டார். இதனை எழுத 254 வகையான விதவிதமான பேனா நிப்புகளை அவர் பயன்படுத்தினார்.
அரசியலமைப்பின் எழுத்துப்பூர்வமான பிரதி இந்திய ஆய்வுக் கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, அது பல்வேறு பிரதிகள் நகல் எடுக்கப்பட்டது. இன்றும் சில கையெழுத்து பிரதிகள் சந்தையில் கிடைக்கின்றன.
நம்முடைய அரசியலமைப்புச் சட்ட புத்தகம் மிகவும் அழகான ஆவணம். அதோடு, மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதில், மொஹஞ்சதாரோ முதல் வேத காலம் வரையிலான வரலாற்றை பிரதிபலிக்கும் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மெளரியா மற்றும் குப்தர் கால சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
முன் பக்கங்கள் ஒன்றில் நடராஜனின் சிற்ப வடிவ ஓவியமும் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல், காந்தி தண்டி யாத்திரை சென்றதை குறிக்கும் படமும் இருக்கிறது.
முஸ்லிம் காலம் முதல் பிரிட்டீஷ் காலம் வரையில் திப்பு சுல்தான், ராணி லஷ்மி பாய் மற்றும் அக்பர் படங்களும் இடம்பெற்றுள்ளன.
இறுதியாக, சுதந்திரத்திற்காக படை அமைத்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம் இடம்பெற்றுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின் முகப்பில் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கிறது.









